Monday, 7 February 2011

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே


கள்ளுக்கடைப் பக்கம் போகாதே
காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்
கண்ணும் புகைந்திடும் நெஞ்சும் வரண்டிடும்
கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்
அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்
விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே
விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா
பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா
பற்றி எரியுதெந்தன் வயிறடா
பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா
கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா
வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும்
உனக்கு நானும் வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்
கடன்காரனாக உன்னை மாற்றிடும்
கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்
கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ
கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ
அன்னை சொல்லு கேட்பானென்றால்
ஆறறிவு படைத்த அவனும் பேரறிஞன் ஆகிடுவானே.

No comments:

Post a Comment